
கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த சதித் திட்டம் குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முக்கிய உளவுத்துறை அதிகாரிகளுடன் இன்று விவாதம் நடத்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடென் இருவரும் டிசம்பர் 25 விமான தகர்ப்பு சதி குறித்து சம்பந்தப்பட்ட உளவுத்துறை தலைவர்களுடன் இன்று விவாதிக்க உள்ளனர்.
இதில் விமான தகர்ப்பு சதி தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகள், உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி, பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜேனெட் நபோலிடனோ, அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர், எஃப்.பி.ஐ. இயக்குனர் ராபர்ட் முல்லர், சி.ஐ.ஏ. இயக்குனர் லியோன் பன்னெட்டா ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.