2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி நடாத்தப்படும் பாராளுமன்ற தேர்தல் 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரமே நடத்தப்படவிருக்கின்றன.
வாக்காளர் இடாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைவாகவே அடுத்த பாராளுமன்றத்திற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளதுடன் அனுராதபுரம் மாவட்டத்திற்கு ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் கொழும்பு மாவட்டத்திலிருந்து இதுவரையில் 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டபோதிலும் இம்முறை 19 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுவர். அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து வழமையாக 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டபோதிலும் இம்முறையிலிருந்து 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாராளுமன்றத்திற்கு முதன் முறையாக தெரிவான 36 உறுப்பினர்களில் 16 உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெற்றுக்கொள்வதற்கான தகுதியை இழக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஆறாவது பாராளுமன்றம் 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 09 ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.